உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் இன்று பதிவியேற்றுக்கொண்டனர்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இன்று (ஜூன் 2, 2026) பதிவாகியுள்ளது. கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா உள்ளிட்ட ஐந்து புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நியமனங்கள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பலத்தை அதிகரிப்பதோடு, பெண் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

புதிய நீதிபதிகளில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் நபர் கோவை வழக்கறிஞர் வி. மோகனா. 1966 ஜூன் 27ஆம் தேதி பிறந்த இவர், 1988ஆம் ஆண்டு கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். 1996ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அட்வகேட்-ஆன்-ரெக்கார்டாக பதிவு செய்யப்பட்ட இவர், 2015ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக உயர்த்தப்பட்டார். பல உயர்மட்ட வழக்குகளில் திறமையுடன் வாதாடியுள்ள மோகனா, இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் வழங்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில் முக்கியப் பங்காற்றினார்.

இந்த வழக்கு பெண்களின் உரிமைகளுக்காக ஒரு மைல்கல்லாக அமைந்தது. உச்சநீதிமன்ற வரலாற்றில், பார் கவுன்சிலில் இருந்து நேரடியாக உயர்த்தப்படும் இரண்டாவது பெண் நீதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் மோகனா. முதலாவது இந்து மல்ஹோத்ரா ஆவார். மேலும், தமிழ்நாட்டிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முதல் பெண் என்ற பெருமையும் இவருக்குச் சேரும். இவரது நியமனம் தமிழ்நாட்டு சட்டத்துறைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

மற்ற நான்கு புதிய நீதிபதிகள் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்கள். ஜஸ்டிஸ் ஷீல் நாகு (பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம்), ஜஸ்டிஸ் ஸ்ரீ சந்திரசேகர் (பம்பாய் உயர்நீதிமன்றம்), ஜஸ்டிஸ் சஞ்சீவ் சச்தேவா (மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம்), ஜஸ்டிஸ் அருண் பள்ளி (ஜம்மு & காஷ்மீர் & லடாக் உயர்நீதிமன்றம்) ஆகியோர் இவர்கள். உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மே 27, 2026 அன்று இவர்களைப் பரிந்துரை செய்தது.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து இன்று பதவியேற்பு நிகழ்ந்தது. இந்த ஐந்து நியமனங்களும் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய பணிச்சுமையை குறைக்கவும், பல்வேறு வழக்குகளை விரைவாக விசாரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, நீதித்துறையில் பாலின சமத்துவத்தை நோக்கிய முக்கிய அடியாக அமையும். சட்டத்துறை வல்லுநர்கள் இந்த நியமனங்களை வரவேற்றுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version