டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற புகழ்பெற்ற சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளர் சோனம் வாங்சுக் 21-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

லடாக் பகுதியைச் சேர்ந்த 59 வயதான சோனம் வாங்சுக், கல்வி சீர்திருத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களுக்காக பரவலாக அறியப்பட்டவர். மே மாதம் நடைபெற்ற NEET-UG மருத்துவ நுழைவுத் தேர்வில் பெருமளவில் கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கோரி CJP இயக்கத்தினருடன் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றார்.

இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் போராட்டக்குழுவினரின் முக்கிய கோரிக்கையாகும்.

வரும் 20-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு பேரணியாகச் சென்று மனு அளிக்கத் திட்டமிட்டிருந்த போராட்டக்குழுவினருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்ட உண்ணாவிரதப் பந்தலில் இருந்து சோனம் வாங்சுக்கை டெல்லி போலீசார் அழைத்துச் சென்றனர். அவர் சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், உடல் செயல்பாடுகள் ஒரளவு சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நீண்ட நாட்களாக உணவு உட்கொள்ளாததால் அவரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீசார் வெளியிட்ட அறிக்கையில், “சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவரை அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் அமைதியான முறையில் இடத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version