செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் தேசிய அளவிலான மூன்று நாள் அலைச்சறுக்கு (Surfing) போட்டி இன்று உற்சாகமாக தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி, கடல் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 80 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். ஆண்கள், பெண்கள், 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் வீரர்கள், அடுத்த மாதம் 6-ஆம் தேதி கோவளம் கடற்கரையில் நடைபெறவுள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என சர்பிங் பெடரேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருண் வாசு தெரிவித்தார்.
அலைச்சறுக்கு விளையாட்டில் மாமல்லபுரம் மற்றும் கோவளம் பகுதிகள் இந்திய அளவில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. இப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் நிலையான மற்றும் பாதுகாப்பான அலைகள் உருவாகுவதால், தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான போட்டிகளை நடத்துவதற்கு மிகவும் ஏற்ற இடமாக அவை கருதப்படுகின்றன. இதனால் இங்கு அடிக்கடி தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், கோவளம் பகுதியைச் சேர்ந்த வீரர்கள் பலர் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், சர்வதேச அரங்கிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
