கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வென்ற தொகுதிகளை கைப்பற்ற திமுக தனிக்கவனம் செலுத்தி வியூகம் அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 4 தொகுதிகளை கைப்பற்றியது நாகர்கோவிலில் காந்தி திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் கோவை தெற்கில் வானதி மொடக்குறிச்சியில் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், 25 தொகுதிகளுக்கு மேல் வழங்க அதிமுக தயாரில்லை. இறுதியில் முடிவாகி எத்தனை தொகுதியில் பாஜக போட்டியிட்டாலும் அந்த 4 சிட்டிங் தொகுதிகள் உட்பட பாஜக போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் அக்கட்சியை தோற்கடிக்க திமுக தனி வியூகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள், வருமான வரித்துறை & அமலாக்கத்துறை சோதனை என மத்திய பாஜக அரசு அளிக்கும் குடைச்சலால் தி.மு.க தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. எனவே இம்முறை பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கக் கூடாது என கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளதாம் திமுக தலைமை.
அப்போது தான் தேசிய அளவிலான பாஜக செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தி திமுகவின் பலத்தை பறைசாற்ற முடியும். எனவே பாஜக போட்டியிடும் தொகுதிகளில் முடிந்தவரை திமுகவே களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிற்கும் தொகுதிகளிலெல்லாம் வெற்றியடைய பல வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்லை தொகுதியில் முக்குலத்தோர் சமுதாயத்தை விட பிள்ளைமார் சமுதாய ஓட்டுக்கள் அதிகம் என்பதால், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு எதிராக பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவரை வேட்பளராக நிறுத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதேபோல், கோவை தெற்கு தொகுதியில் திமுக மாணவரணி செயலர் ராஜிவ்காந்தி, நாகர்கோவில் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதிக்கு எதிராக பேரூர் ஒன்றிய திமுக செயலர் சரவணன் என வேட்பளர்களை களமிறக்க தேர்தல் வியூக நிறுவனம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறுபுறம் திமுகவின் வியூகங்களை, நகர்வுகளை ஓரளவு அறிந்துள்ள பாஜகவும் அதை முறியடித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு காய்களை நகர்த்த துவங்கி உள்ளனராம். இருபக்கமும் அமைக்கும் வியூகங்களில் மக்களை கவரப்போவது யார்? என பார்ப்போம்.
