முள்ளிவாய்க்கால் பேரவலத்தில், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை இனத்தை அழித்த கயவர்கள் எனத் திட்டித் தீர்ப்பதுடன் தமிழர்களின் போராட்டம் சுருங்கிப்போய்விட்டதாக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளதாவது;-
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 17 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆண்டுதோறும் மே மாதம் வந்துவிட்டால், தமிழர்களிடம் ஒரு தற்காலிக ‘வலி சுமந்த’ உணர்வு ஒட்டிக்கொள்கிறது.
மே 17 அல்லது 18ஆம் தேதிகளில் ஒரு சிரட்டையில் கஞ்சியைக் குடித்துவிட்டு, அதைச் சமூக வலைத்தளங்களில் புகைப்படமாகப் பதிவேற்றி ‘லைக்’ வாங்குவதோடு நமது தாயகக் கடமை முடிந்துவிடுவதாக நாம் நம்புகிறோம்.
அடுத்த நாளே, அந்த வலியையெல்லாம் மறந்துவிட்டு, தத்தமது அன்றாட வேலைகளில் மூழ்கிவிடும் ஒரு விசித்திரமான மறதி நோய் ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் தொற்றிக் கொண்டுள்ளது.
அதைவிடுத்து, நமது விடுதலைப் போராட்டம் ஏன் அழிக்கப்பட்டது? முப்படை கொண்டு வீறுகொண்டு எழுந்த புலிகள் இயக்கம் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டது? இறுதி யுத்தத்தில் நமது மக்கள் ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கப்பட்டதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார், அவர்களை எவ்வாறு உலக அரங்கில் அம்பலப்படுத்துவது என்று எவராவது சிந்தித்திருக்கிறோமா என்றால்… விடை ‘இல்லை’ என்பதுதான்.
முகநூலில் பதிவு போடுவதும், போனஸாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை இனத்தை அழித்த கயவர்கள் எனத் திட்டித் தீர்ப்பதுடன் தமிழர்களின் போராட்டம் சுருங்கிப்போய்விட்டது.
நமது வீழ்ச்சிக்குக் காரணமான உண்மையான துரோகிகளையும், சர்வதேசச் சதிகளையும், சுயநலக் கூட்டத்தையும் நாம் இன்னும் ஆழமாக அலசிப் பார்க்கத் தவறிவிட்டோம்.
அந்த வரலாற்றுத் துரோகிகளின் பட்டியலை நாம் சுயவிமர்சனத்தோடு நோக்குவது இன்றியமையாதது. ஈழப் போராட்டத்தை நசுக்கியதில் முதன்மைப் பங்கு சர்வதேச வல்லரசுகளுக்கு உண்டு.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்‘ (War on Terror) என்ற போர்வையின் கீழ், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஒன்றிணைந்து விடுதலைப் புலிகளை அழிக்கத் திட்டமிட்டன. இதற்கு இந்தியாவின் அப்போதைய காங்கிரஸ் அரசும், தமிழகத்தின் ஆளுங்கட்சியான தி.மு.க–வும் தங்களது நேரடி மற்றும் மறைமுக ஆதரவை வழங்கி, தமிழின அழிப்பின் நேரடிப் பங்காளிகளாக மாறின.
விடுதலைப் புலிகளின் இராணுவப் பலவீனங்களையும், பாதுகாப்புப் பாதைகளையும் சிங்களப் பேரினவாத அரசிற்குப் பிய்த்துப் போட்டுக் காட்டிய கருணா , டக்ளஸ், சித்தார்த்தன் போன்ற உள்ளூர் துரோகிகள், இந்த இன அழிப்பிற்குப் பெரும்பாதையை அமைத்துக் கொடுத்தனர்.
“நாட்டைக் காக்க வீட்டுக்கொருவர் முன்வாருங்கள்” எனப் புலிகள் இயக்கம் அழைப்பு விடுத்தபோது, அதைக் காதில் வாங்காமல் கப்பலேறியும், விமானமேறியும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள் பலர்.
குறிப்பாக, சமாதானக் காலத்தில் ஏ-9 பாதை திறக்கப்பட்டதும், “விட்டால் போதும்” என்று தமிழ் மக்களைக் கொலைக்களத்தில் கைவிட்டுவிட்டு, வன்னியிலிருந்து தப்பி ஓடி இன்று வெளிநாடுகளில் தங்களை ‘ஈழ உணர்வாளர்களாகக்‘ காட்டிக்கொள்ளும் கோழைகள் இப்போராட்டத்தின் பெரும் சாபக்கேடு.
நாட்டை விட்டு ஓடிய பத்து இலட்சம் தமிழர்களில், ஒரு இலட்சம் பேர் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தால், யுத்தத்தின் முடிவு வேறாக இருந்திருக்கும்; தமிழீழம் மலர்ந்திருக்கும்.
ஈழத்தில் வன்னியில் கடைசி நேர யுத்ததில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, தங்களது அகதிக் கோரிக்கை (Refugee status) அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், ஊடகங்களில் தங்கள் முகம் வர வேண்டும் என்பதற்காகவும் புலிக்கொடியைப் பிடித்து வீதியில் We want TamilE*lam என கத்தியவர்கள் பலர்.
இவர்களின் இத்தகைய முதிர்ச்சியற்ற, சுயநலப் போராட்டங்கள் சிங்களப் பேரினவாதிகளுக்கு மேலும் வெறியூட்டியது. இதனால் வன்னியில் இருந்த அப்பாவி மக்கள் மீது சிங்கள அரசு தன் இனவெறியை இன்னும் கொடூரமாகக் கட்டவிழ்த்துவிட இவர்கள் மறைமுகக் காரணமாயினர்.
வன்னியில் ஒரு புதிய வரலாறே அழிந்து கொண்டிருந்தபோது, தமக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல, எந்தவிதப் போராட்டங்களோ, கொந்தளிப்புகளோ இன்றி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வடக்கு–கிழக்கு , கொழும்பு வாழ் தமிழ் உயிரினங்கள் மற்றும் ஏனைய தமிழர்களின் மௌனமும் இந்த அழிவுக்கு முக்கியக் காரணியாகும்.
புலிகளுக்கு ஆயுதம் வாங்கவும், மக்களின் மருத்துவத் தேவைகளுக்காகவும் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட பல புலம்பெயர் தமிழ் முதலாளிகள், சேர்ந்த நிதியில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே தாயகத்திற்கு அனுப்பிவிட்டு, மீதி 90 சதவீத நிதியைத் தங்களுக்குள் சுருட்டிக்கொண்டனர். இந்த நிதியிழப்பு போராட்டத்தின் பின்னடைவுக்குப் பலத்த அடியாக அமைந்தது.
புலிகளின் சர்வதேசச் சொத்துக்களையும், வணிகக் கட்டமைப்புகளையும் பராமரித்து வந்த சில ஈழத்தமிழர்கள், அந்தச் சொத்துக்களின் மேல் ஏற்பட்ட பேராசையினால், அவற்றை முழுமையாகக் கையகப்படுத்தத் திட்டமிட்டனர்.
இதற்காகச் சிங்களஅரசிற்குப் புலிகள் சம்பந்தமான பல இரகசியங்களைக் காட்டிக்கொடுத்து, போராட்டத்தையும் அதன் கட்டமைப்பையும் நிர்மூலமாக்கத் துணை நின்றனர். “நிறைய மக்கள் இறந்தால் உலக நாடுகள் தலையிடும், அமெரிக்கா நேரடியாகக் களம் இறங்கும்” என்ற தவறான, போலியான இராஜதந்திரத் தகவல்களைப் புலிகளின் தலைமைக்கு வழங்கி, பெருமளவு மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் ஒன்றுகூடவும், அவர்கள் கொன்றொழிக்கப்படவும் காரணமான ‘அரசியல் மேதாவிகளும்‘ இதில் அடங்குவர்.
ஆயுதக் கொள்வனவில் மிகப்பெரிய ஊழல்களைச் செய்து, தரம் குறைந்த ஆயுதங்களைக் கப்பலில் அனுப்பிவிட்டு, அந்த ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை இலங்கை கடற்படைக்கே கசியவிட்டு, கப்பல்களை மூழ்கடித்த புலம்பெயர் தமிழர்களும் உண்டு. இதன் மூலம் முழு நஷ்டத்தையும் இயக்கத்தின் தலையில் கட்டிவிட்டு, இன்சூரன்ஸ் மற்றும் கமிஷன் பணத்தில் கொழுத்தவர்கள் இன்றும் வெளிநாடுகளில் தம்மை ஈழ உணவாளர்கள் போல காட்டிக் கொள்கின்றனர்.
இவர்கள் அனைவரும் நமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படவும், முள்ளிவாய்க்காலில் நமது உறவுகள் அநாதரவாகக் கொல்லப்படவும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தவர்களே ஆவர்.
ஆண்டுக்கு ஒருமுறை சிரட்டைக் கஞ்சி குடித்துவிட்டு, உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் இழந்த மண்ணையோ, மக்களுக்கான நீதியையோ நாம் பெற்றுவிட முடியாது. நம்மைச் சுற்றி இருக்கும் இத்தகைய துரோகிகளையும், சுயநல சக்திகளையும் அடையாளம் கண்டு புறக்கணிப்பதே, மடிந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். வரலாறு எவரையும் மன்னிக்காது; குறிப்பாகத் துரோகிகளை அது ஒருபோதும் மன்னிக்காது.
