திருப்பூர் அருகே மூடப்பட்டிருந்த பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற நபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சமந்தாபாளையம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை எண் 2325 கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மூடப்பட்ட நிலையில், கடையின் உள்ளேயிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பிற பொருட்களைப் பாதுகாக்கும் பணியில் ஓர் பாதுகாவலர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த கோழிக்கடை உரிமையாளர் கார்த்தி உள்ளிட்ட நான்கு பேர் மது போதையில் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பாரில் தண்ணீர் பாட்டில் கோரியபோது பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக பாதுகாவலர், கடையை முன்பு நடத்தி வந்த மருதமுத்து என்பவருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் திருப்பூரில் இருந்து சமந்தாபாளையம் வந்த மருதமுத்து, போதையில் ரகளையில் ஈடுபட்டிருந்த நபர்களை அங்கிருந்து அகற்ற முயற்சி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் தங்களிடம் இருந்த கத்திகளைக் கொண்டு மருதமுத்துவை சரமாரியாகத் தாக்கினர். அவரது உடலில் நான்கு இடங்களில் ஆழமான கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மருதமுத்துவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாவலர் உடனடியாக உதவிக்கு அழைப்பு விடுத்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் மருதமுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஊதியூர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தலைமறைவாக இருந்த கார்த்தி, வலுகூறான், முத்துக்குமார், பிரகாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மதுபானக் கடை மூடப்பட்ட பின்னரும் அவ்வப்போது நிகழும் ரகளைகள் மற்றும் போதை தொடர்பான சம்பவங்கள் உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மருதமுத்துவின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். போலீசார் முழு விவரங்களையும் திரட்டி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version