தமிழக அரசு, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் குளிர்சாதன மற்றும் மின்சார பேருந்துகள் கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் 1,770 முறை பழுதடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உரிமை அறியும் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தகவலின்படி, நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 372 பேருந்துகள் பழுதடைந்துள்ளன.

சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் 625 பேருந்துகளை தனியார் நிறுவனம் இயக்கி வருகிறது. இதற்காக மின்சார பேருந்துகளுக்கு கிலோமீட்டருக்கு ரூ.71 மற்றும் குளிர்சாதன பேருந்துகளுக்கு ரூ.81 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழக அரசு வருடத்திற்கு சுமார் ரூ.80.60 கோடியை தனியார் நிறுவனத்துக்கு செலுத்தி வருகிறது.

ஆனால், ஒப்பந்தப்படி குறிப்பிட்ட தூரம் பேருந்துகள் இயக்கப்படாததால், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.9.52 கோடி அபராதம் தனியார் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த பழுதுகள் மற்றும் சேவை குறைபாடுகள் பொதுமக்களின் அன்றாட பயணத்தை பாதித்து வருகின்றன.

ஊழியர்கள் கேள்வி: ஊழியர் பற்றாக்குறை காரணமாக தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பு கூறுகிறது. எனினும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ‘கரப்ஷன்’ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இதை கடுமையாக விமர்சித்துள்ளன. “பேருந்துகளில் தொடர் குளறுபடிகள் நிலவும் போது ஏன் தனியாரிடம் ஒப்பந்தம் கொடுக்க வேண்டும்? அரசே நேரடியாக நடத்தினால் முழு சேவையும், நல்ல வருமானமும் பொதுமக்களுக்கு கிடைக்கும்” என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

முந்தைய அரசின் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை தற்போதைய தமிழக அரசு மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்துத் துறையில் தரமான, நம்பகமான சேவையை உறுதி செய்ய தேவையான மாற்றங்களை அரசு கொண்டு வருமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version