திண்டுக்கல் மாவட்டம், பழனியில் புகழ்பெற்ற தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான பழனி மலை அடிவாரத்தில் உள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் மதிப்புமிக்க நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி வழக்கில் நிலத்தை விற்றதாகக் கூறப்படும் திருப்புகழ் சுவாமிகள் முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான்குளம் வெள்ளத்துரை மற்றும் பழனி டி.கே.என்.புதூர் சேதுபதி ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் இவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். தலைமறைவான சேதுபதியின் பழனி வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பத்திரப்பதிவு நாளில் சாட்சியாக கையெழுத்திட்டவர்களும் தலைமறைவாகியுள்ளதால் விசாரணை மேலும் சிக்கலாகியுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பழனி அடிவாரம் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்றமும் முறைகேடான பத்திரப் பதிவை ரத்து செய்தது. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பின்னர், டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான குழு தீவிர விசாரணையைத் தொடங்கியது.
தேவஸ்தான அதிகாரிகள், பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி உள்ளிட்ட பலரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணை அழுத்தம் காரணமாக தேவஸ்தானம் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் இடையே பெரும் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படுகிறது. நிலத்தை விற்ற முருகதாஸ் சுவாமிகள் மற்றும் வாங்கிய சேதுபதி ஆகியோரின் புகைப்படங்கள் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளன.
அரசியல் கட்சியினர் உட்பட பலரும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட வலியுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவானோர் தங்கள் செல்போன்களை அணைத்து வைத்திருப்பதால் அவர்களைக் கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு தடயங்களை ஆராய்ந்து வருகின்றனர். இந்த முறைகேடு தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில் நிலங்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. வழக்கு தொடர்பான முழு விசாரணையும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
