தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முக்கிய மாற்றம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கட்சியின் துணைத் தலைவர் பதவியை ஜான் ஆரோக்கியசாமி குறிவைத்து நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே முதல்வர் விஜய்யின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி, அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். முதல்வரின் நண்பர் விஷ்ணு ரெட்டியுடன் இணைந்து இந்தக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளுநர் அர்லேக்கரை நேரில் சந்தித்து புகார் அளித்தன. தவெகவில் இதுவரை துணைத் தலைவர் பதவி உருவாக்கப்படவில்லை. தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொறுப்பில் உள்ளனர். முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் கட்சி நிர்வாகத்தை பெரிதும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜான் ஆரோக்கியசாமியை கட்சியின் உயர்பொறுப்புக்கு கொண்டு வருவதன் மூலம் அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தலாம் என முதல்வர் விஜய் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ஜான் ஆரோக்கியசாமியின் நுழைவுக்கு ஆதவ் அர்ஜுனா அணி எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே உட்கட்சி மோதல்கள் உச்சத்தில் இருக்கும் சூழலில், இந்த நடவடிக்கை அதிகாரப் போட்டியை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி நியமனத்திலும் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், இந்தப் புதிய முயற்சி கட்சிக்குள் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஜான் ஆரோக்கியசாமியை கட்சியில் இணைத்து பொறுப்பு வழங்கும் முடிவை விஜய் விரைவில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் தேர்தல் இயந்திரத்தை வலுப்படுத்தும் நோக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்வர் இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காதது கட்சியினரிடையே பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
