கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் இன்று ஆஜராகிறார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்கப்போகும் கேள்விகள் என்ன என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் – வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையின் முக்கிய நகர்வாக இன்று டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராகிறார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். அவரிடம் சுமார் 56 கேள்விகள் கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், என்னென்ன கேள்விகள் என்பது தொடர்பான தகவலும் ஊடகங்களில் கசிந்துள்ளது.
அதன்படி, விஜய்யிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகளை பொறுத்தவரை,
1. நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இறுதி முடிவு யாருடையது?
2. கூட்டம் அதிகமாகிறது என்று தகவல் வந்தபோது நிகழ்ச்சியை தொடரச் சொன்னது யார்?
3. மேடையில் இருந்தபோது பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு இருந்ததா?
4. கூட்ட நெரிசல் ஏற்பட்ட அந்த நிமிடங்களில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
5. காயமடைந்தவர்கள் பற்றி உடனடி தகவல் கிடைத்ததா?
6. மேடையிலிருந்து பின்வாங்குங்கள், அமைதியாக இருங்கள் போன்ற அறிவுறுத்தல் கொடுக்க முயற்சி செய்தீர்களா?
7. கரூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றிடமிருந்து முன் அனுமதி பெறப்பட்டதா?
8. கூட்ட அளவு, நேரம், பாதுகாப்பு போன்ற காவல்துறையின் நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா?
9. பாதுகாப்பு பணியாளர்கள், தடுப்புகள், நுழைவு–வெளியேற்ற வழிகள் இருந்ததா?
10. கூட்டம் திடீரென அதிகரித்ததை யார் கவனித்தனர், என்ன நடவடிக்கை எடுத்தனர்?
என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம் இவ்வாறு கேள்விகள் வெளியாவதே, அரசியல் வட்டாரத்தில் ஒருவகையான சந்தேக கண்களோடு பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும், தற்போதைய அரசியல் சூழலில் இந்த சிபிஐ விசாரணைக்கு பின்பு கரூர் விவகாரத்திலும் சரி, தவெகவின் கூட்டணி முடிவிலும் சரி சில மாற்றங்கள் தென்படலாம் என கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
