தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், கட்சித் தலைவர்களை தேடிச் சென்று சந்தித்தது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் வியப்புக்குரியதாகி உள்ளது.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர்  விஜய் மே 11ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரம்பூர் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். இதன்பின்னர் பிற்பகலில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கப் புறப்பட்டார்.

3.30 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் விஜய்யை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார். மு.க.ஸ்டாலினும் ஆரத்தழுவிய பின்னர் கைகளைப் பற்றி  வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். இருவரும் மலர்க் கொத்துகளைப் பறிமாறிக் கொண்டனர். அப்போது காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்னும் புத்தகத்தை மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு வழங்கினார்.

இதன்பின்னர், அண்ணாநகரில் உள்ள வைகோ இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் விஜய்யை, துரை வைகோ வரவேற்று அழைத்து சென்றார். வைகோ தனது குடும்பத்தினரை விஜய்க்கு அறிமுகப்படுத்தியதோடு அவர்கள் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். மிகுந்த உற்சாகத்துடன் விஜய்யின் ஒரு கையைப் பற்றிக் கொண்ட வைகோ மிடுக்குடன் வீட்டு முன் திரண்டு நின்றவர்களை நோக்கி மறு கையை ஆட்டியவாறு சென்றார்.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியின் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் விஜய்யை, வாசலில் வைத்தே மலர்ச்செண்டு கொடுத்து உள்ளே அழைத்து சென்றார் அன்புமணி. அங்கு குடும்பத்தினரையும் நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் பூங்கொத்துகளையும் பறிமாறிக் கொண்டனர்.

அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், நீலாங்கரையில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டுக்கு சென்றார். முதலமைச்சரை எதிர்நோக்கியிருந்த சீமான், விஜய் காரை விட்டு இறங்கி வந்ததும் ஓடோடிச் சென்று இறுகத் தழுவியபடி வீட்டுக்குள் அழைத்து சென்றார். தொடர்ந்து சால்வைகளையும் மலர்க்கொத்துகளையும் பறிமாறிக் கொண்டபின்னர், புத்தகம் ஒன்றையும் நினைவுப்பரிசாக வழங்கினார்.

மூன்றரை மணிக்குத் தொடங்கிய முதலமைச்சர் விஜய்யின் 4 அரசியல் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு 5.30 மணிக்கு நிறைவு பெற்றது.

முதலமைச்சர் விஜய்யின் இந்த அரசியல் நிமித்தமான சந்திப்பு, தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒன்றாகும்.

சட்டப்பேரவைத் தேர்தலில்  யாருமே எதிர்பாராத வகையில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த விஜய், இன்று அரசியல் கட்சித் தலைவர்களைத் தேடிச் சென்று சந்தித்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version