அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், ஜோர்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, தன் படைகளுக்கு மீண்டும் தாக்குதல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் அமெரிக்கா ஈரான் மீது சரமாரியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த வார தொடக்கத்தில் ஜோர்டனில் உள்ள அமெரிக்க தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அமெரிக்க படைகள் அனைத்து ஏவுகணைகளையும் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக சென்ட்காம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எதிர்கால அச்சுறுத்தல்களை முழுமையாக ஒழிக்கும் வகையில் இந்த பதிலடித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்கமளித்தனர். டிரம்ப், “ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” என்று எச்சரித்தார். “எங்கள் படைகள் மீதான தாக்குதலை லேசாக எடுத்துக்கொள்ள மாட்டோம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதே நேரத்தில், ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்டு அமெரிக்க-சவுதி படைகள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த மோதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை அதிகரித்துள்ளன. ஈரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பிராந்திய அளவில் பரந்த அளவிலான மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இது இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு கூடுதல் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய தாக்குதல்கள் அந்த முயற்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version