தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் கட்சி மாறி வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் பின்னணியில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜா, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆதரவாக வாக்களிக்க அல்லது கட்சி மாற ரூ.35 கோடி வழங்கப்படும் என தொலைபேசி மூலம் பேரம் நடந்ததாகவும், மறுத்ததால் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியானது.

இருவரும் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது. உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்து, தலா ரூ.25,000 சொந்த ஜாமின் மற்றும் இரு நபர் உத்தரவாதம் அளித்து ஜாமின் பெறலாம் என உத்தரவிடப்பட்டது. மேலும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை-மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது உதவியாளர் சுப்பிரமணியின் மூர்த்திபாளையம் வீடு, கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் வீடு, கோதைநகரில் உள்ள கார்த்திக் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. மண்மங்கலம் அருகே உள்ள பூர்வீக வீடு உள்பட மொத்தம் ஐந்து இடங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கைகள், ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையை மேலும் சூடாக்கியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version