நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு இல்லத்தில் அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ளார் முதலமைச்சர் விஜய். நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். கடந்த 27ஆம் தேதி முதல் முறையாக டெல்லி சென்றபோது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தார் விஜய். அப்பயணத்தின்போது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்திக்காமலேயே சென்னை திரும்பினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்திற்காக இன்று டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். ஜெயா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினரின் மரியாதைப் படையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் மாலை நேரத்தில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து மரியாதை நல்கவுள்ள முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய திட்டங்கள், மத்திய-மாநில உறவுகள் உள்ளிட்டவற்றை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் விஜய், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளார். மத்திய அரசின் நிதி உதவி, திட்டங்கள் செயல்பாட்டில் உள்ள சவால்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசுவார் என மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை இரவு பிரதமர் நரேந்திர மோடி தமது இல்லத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உணவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவுள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த பயணத்தின்போது அமித் ஷாவை சந்திக்க நேரம் கோரியும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெல்லி பயணம் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல முக்கிய முடிவுகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மத்திய அரசுடன் நல்லிணக்கத்துடன் செயல்படும் அதேவேளையில், மாநிலத்தின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் செயல்படுவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
