இமாச்சலப் பிரதேசத்தில் உணவுப் பொருள் (குர்குரே) மூச்சுக்குழாயில் அடைத்துக் கொண்டதால் ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக, 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலம், சோலன் மாவட்டத்தின் அர்கி பகுதிக்குட்பட்ட ‘தால்’ (Tal) கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் சர்மா (28). இவர் வீட்டில் தின்பண்டம்  சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அதன் சிறிய துண்டு அவரது மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் துடிதுடித்துள்ளார். ஹேமந்த் சர்மாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சுல்தான்பூரில் உள்ள எம்எம்யு (MMU Sultanpur) மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள புகழ்பெற்ற பிஜிஐ (PGI Chandigarh) மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அவரைப் பரிந்துரைத்தனர். அங்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், துரதிர்ஷ்டவசமாக ஹேமந்தின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

இந்தத் துயரச் சம்பவம், உணவு உண்ணும் போது ஏற்படும் மூச்சு அடைப்பு மற்றும் அதற்கான முதலுதவி குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

உணவோ அல்லது ஏதேனும் ஒரு பொருளோ தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட நபரின் பின்னால் நின்று, அவரது வயிற்றுப் பகுதியை மேல்நோக்கி வேகமாக அழுத்துவதன் மூலம் மூச்சுக்குழாய் அடைப்பை நீக்கி உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version