ஊழலை அறவே ஒழிப்பேன் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் செயல்களுக்கு எதிராக மக்களுக்கு எளிதான புகார் அளிக்கும் வழியை உருவாக்கியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், முதல்வர் விஜய்யின் உறுதியான நடவடிக்கைகளில் இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கோரினால், உடனடியாகப் புகார் அளிக்க 94981 80936 என்ற வாட்ஸ் அப் எண்ணைப் பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மின்னஞ்சல் மூலமும் புகார்களைப் பதிவு செய்யலாம். லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் மின்னஞ்சல் முகவரி dvac@nic.in. தொலைபேசி எண்களான 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ள முடியும். நேரடியாகப் புகார் அளிக்க விரும்புவோர், லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம், எண் 293, எம்.கே.என். சாலை, ஆலந்தூர், சென்னை – 600016 என்ற முகவரிக்கு தபால் அல்லது நேரில் சென்று புகார் தரலாம்.

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் இதுதொடர்பாக அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஒவ்வொரு துறையின் இணையதளத்திலும் இந்த வாட்ஸ் அப் எண்ணைப் பிரதானமாக வெளியிட வேண்டும் என்றும், லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதள இணைப்பையும் இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் பதிவு செய்ய முடியும்.

கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், “ஊழல் ஒழிந்துவிட்டது. யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம். இது உங்கள் விஜய் ஆட்சி. லஞ்சம் வாங்குபவர்களை நான் பார்த்துக் கொள்வேன்” என்று உறுதியளித்திருந்தார். “ஒரு பைசா கூட தொட மாட்டேன், தொடவும் விட மாட்டேன்” என்ற அவரது வாக்குறுதி, இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின், ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வர் விஜய்யின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், எதிர்க்கட்சிகள் சில இன்னும் லஞ்சப் புகார்கள் தொடர்வதாக விமர்சனம் செய்து வருகின்றன. எனினும், புகார்கள் வந்தவுடன் கட்சி பாகுபாடின்றி, பதவியின் உயர்வு தாழ்வு பாராமல் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தப் புதிய அமைப்பு, அரசு சேவைகளை முழுமையாக ஊழல் நீங்கியதாக மாற்றும் முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version