திருப்பத்தூர் மாவட்டம் விசாமங்கலம் பகுதியில், சொத்து பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பார்வையற்ற தனது தாயை மகன் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனோகரன் – விஜயலட்சுமி தம்பதியின் மகன் கோபி, தன் பார்வையற்ற தாய் விஜயலட்சுமியை முகத்தில் எட்டி உதைத்ததோடு, அதைக் கண்டித்த தன் சகோதரர் ஜோதிராஜையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜோதிராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாயை மகன் தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோபி மீது காவல்துறை உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
