ரஷ்யாவிடமிருந்து 30 நாட்கள் எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா வழங்கியுள்ள தற்காலிக அனுமதிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிகமாக 30 நாட்கள் அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, “இது இந்தியாவின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும் விடப்பட்ட சவால்” என்று கொதித்துள்ளது. ஒரு சுதந்திர நாடான இந்தியா, யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமெரிக்காவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீங்கள் புதினிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம் என டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். டிரம்ப் புதிய விளையாட்டைத் தொடங்கியுள்ளார். இது அமெரிக்காவின் அப்பட்டமான மிரட்டல்” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மக்களவை எம்.பி மணிஷ் திவாரி, “அமெரிக்கா 30 நாள் அவகாசம் வழங்குகிறது என்ற வாசகமே ஆணவம் நிறைந்தது. நாம் என்ன வாழைப்பழக் குடியரசா? நமது எரிசக்தி பாதுகாப்பைத் தீர்மானிக்க அமெரிக்காவின் அனுமதி தேவையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, “ஆபரேஷன் சிந்தூர் முதல் ரஷ்ய எண்ணெய் விவகாரம் வரை, பாஜக அரசு இந்தியாவின் சுதந்திரத்தை அடமானம் வைத்துவிட்டது. மத்தியில் ஒரு அரசாங்கம் இருக்கிறதா?” என்று தெரிவித்துள்ளார்.
