புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி சார்பில் ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் அதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான அன்பழகன் உப்பளம் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். அதேபோல், உருளையன்பேட்டை தொகுதியில் காந்தி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் (16 இடங்கள்) மற்றும் பாஜக (10 இடங்கள்) ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலைச் சந்திக்கிறது. மீதமுள்ள இடங்களில் லோக் ஜனசக்தி போன்ற சிறிய கட்சிகள் போட்டியிடுகின்றன. கடந்த முறை அதிமுகவுக்குத் தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறி நிலவிய நிலையில், இந்த முறை இரண்டு முக்கியத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், விரைவில் இவர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
