வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று (மே 1) ரூ.933 அதிரடியாக உயர்த்தப்பட்டு ரூ.3,237-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலவாணி மதிப்பைக் கணக்கில் கொண்டு பாரத் பெட்ரோலியம்,  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள்  சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றி அமைத்து வருகின்றன.

இந்தநிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக மே மாதத்துக்கான வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று (மே 1) அதிரடியாக ரூ.933 உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள், உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரிக்கும் என்று வெளியாகும் செய்திகளால் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படமாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான இஸ்ரோல், அமெரிக்கா இணைந்து பிப்ரவரி 28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது தற்காலிகமாக போர் நிறுத்தம் உள்ளது. இந்தநிலையில் போர் தொடங்கியது முதல் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ரூ.144-ம், ஏப்ரல் மாதம் ரூ.200-ம் தற்போது மே மாதம் அதிரடியாக ரூ.993ம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version