பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய 10வது நாளில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரை தொடங்கியது. அப்போது ராகுல் காந்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பற்றி பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அவசியம்” என்றார்.
“நாம் ஒரு போரின் காலத்தில் வாழ்கிறோம். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் இன்னும் தொடர்கிறது. சீனா அமெரிக்காவை சவால் செய்து வருகிறது. தற்போதைய காலத்தில் எரிசக்தி மற்றும் நிதி ஆயுதங்களாக மாறியுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.” ஆனால், உலகில் நடக்கும் மோதல்களை கையாள எந்த நடவடிக்கையும் இல்லை” என்றார்.
மேலும், இந்திய தரவுகள் அமெரிக்காவிற்கு மிக முக்கியமானவை. நமது மக்கள் தொகை ஒரு பெரிய பலமாகும், நம் மக்கள், தரவுகள், உணவு உற்பத்தி செய்யும் திறன், எரிசக்தியை பாதுகாக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரவுகள் குறித்து பேசியிருக்க வேண்டும். தரவுகளை பற்றி குறிப்பிட்டிருந்தால், அமெரிக்காவுக்கு சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். தரவுகள் நாட்டை வல்லரசாக மாற்றும், அமெரிக்க டாலரை காக்க இந்திய தரவுகள் தேவை.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், ஏழை விவசாயிகளை நசுக்க அரசாங்கம் வழிவகுத்துள்ளது. இதற்கு முன்பு நாட்டின் எந்த பிரதமரும் இதைச் செய்ததில்லை. நமது விவசாயிகள் முதல் முறையாக நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். அமெரிக்க இறக்குமதிகள் 46 பில்லியன் டாலரிலிருந்து 146 பில்லியன் டாலராக அதிகரிக்கும். இந்தியாவின் மீதான வரிகள் 3 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும், அவர்களுடையது 16 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகவும் குறைந்துள்ளது” என்றார்.
மேலும், “நீங்கள் நாட்டை விற்றுவிட்டீர்கள் என்று நான் சொல்கிறேன். இந்தியாவை விற்றதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் எங்கள் தாய்நாடு இந்தியாவை பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்” என்று குற்றம்சாட்டினார்.
“நான் பொருளாதார ஆய்வறிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இரண்டு விஷயங்களைக் கவனித்தாக கூறிய ராகுல் காந்தி, முதலாவதாக, நாம் வாழும் உலகில் புவிசார் அரசியல் மோதல்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவின் முன்னணி நிலையை சீனா, ரஷ்யா மற்றும் பிற சக்திகள் சவால் செய்து வருகின்றன. இரண்டாவது, மிகவும் கவலைக்குரியது, நாம் எரிசக்தி மற்றும் நிதியை ஆயுதமயமாக்கும் உலகில் வாழ்கிறோம்.
பிரதமரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் சில காலத்திற்கு முன்பு போர் சகாப்தம் முடிந்துவிட்டது என்று ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டதை சுட்டிக்காட்டி பேசிய ராகுல், உண்மையில், நாம் போர் சகாப்தத்தில் நுழைகிறோம். உக்ரைனில் போர் நடந்து கொண்டிருக்கிறது, காசாவில் போர் நடந்து கொண்டிருக்கிறது, மத்திய கிழக்கில் போர் நடந்து கொண்டிருக்கிறது, ஈரானில் போர் அச்சுறுத்தல் நிலவுகிறது என்பதை நீங்கள் காணலாம் என்றார்.
நான் அரசுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) விளைவுகளைப் பற்றி எச்சரிக்க விரும்புவதாக கூறிய ராகுல், இந்தியாவில் பிரபலமாக இருக்கும் மென்பொருள் பொறியாளராக வேண்டும் என்ற எண்ணம் சவாலுக்கு உள்ளாகப் போகிறது. ஆபத்தான உலகில் நுழையும்போது, முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஒரு தனிநபராகவும், ஒரு தேசமாகவும் உங்கள் பலம் என்ன என்பதுதான். 1.4 பில்லியன் மக்கள், திறமையானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள், உலகில் உள்ள எவருக்கும் சவால் விடக்கூடியவர்கள்” என்று கூறினார்.
