மக்களவையில் நேற்றைய பட்ஜெட் விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டையும், பாரத மாதவையும் “விற்றுவிட்டார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் நாட்டை “விற்றுவிட்டது” என்றும், இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைத்துவிட்டதாகவும் பதிலடி கொடுத்தார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவாதத்தின் போது ஷார்ம் எல்-ஷேக் சம்பவத்தையும் குறிப்பிட்டார். “நாட்டையும், விவசாயிகளையும், ஏழைகளையும் விற்றது காங்கிரஸ்தான். இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைத்து பேசியது நீங்கள்தான். கிரண் ரிஜிஜு சரியாகவே கூறினார், இந்தியாவை விற்க யாரும் பிறக்கவில்லை; பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் அதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.
https://x.com/nsitharamanoffc/status/2021634705653965191?
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2009ஆம் ஆண்டு எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையை குறிப்பிட்டார். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஜா கிலானி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு, 26/11 மும்பை தாக்குதல்களுக்கு ஏழு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றது.
இதனை சுட்டிக்காட்டிய சீதாராமன், “ஷார்ம் எல்-ஷேக்கில் பாகிஸ்தானுடன் பேச விரும்பியவர்கள் தான் இப்போது எங்களுக்கு பேச்சுவார்த்தை குறித்து அறிவுரை வழங்குகிறார்கள்,” என்று விமர்சித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உலக வர்த்தக அமைப்பு (WTO) பாலி மாநாட்டிலும் இந்தியாவின் நலன்களை பாதித்ததாக குற்றஞ்சாட்டினார். 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், வர்த்தக வசதிப்படுத்தல் ஒப்பந்தம் (Trade Facilitation Agreement – TFA) மற்றும் பொது கையிருப்பு (உணவு பாதுகாப்பு) தொடர்பான ‘அமைதி விதி’ (peace clause) ஆகியவை பாதிக்கப்பட்டதாக நிர்மலா குற்றம்சாட்டினார். அதன் மூலம் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலன்களை விற்றுவிட்டது. “காங்கிரஸ் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலன்களை விற்றது மட்டுமல்லாமல், நாட்டையும் விற்றுவிட்டது” என்று அவர் கூறினார்.
