ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கமாட்டோம் என பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெளியான தகவல்களை இந்தியா நிராகரித்துள்ளது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, 140 கோடி இந்தியர்களுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு முக்கிய முன்னுரிமை என்பதை அரசு பலமுறை பொது வெளியில் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், சந்தை நிலவரங்களும் மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளும் கருத்தில் கொண்டு இந்தியா தனது எரிசக்தி கொள்முதல்களை பல்வேறு நாடுகளிலிருந்து மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், எங்கள் தேவைகளுக்கு ஏற்ப உலகின் எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் தேசிய நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படும். இதுவரை எடுக்கப்பட்டதும், இனி எடுக்கப்படவுள்ள அனைத்து முடிவுகளும் இதே அடிப்படையிலேயே இருக்கும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று ரஷ்யாவும் தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் வர்த்தகம் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்,” என்று கூறினார்.
மேலும், வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் வெனிசுலா நீண்டகால கூட்டாளியாக இருந்து வருகிறது என்று கூறியது. ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “நாங்கள் 2019-20 ஆம் ஆண்டு வரை வெனிசுலாவிடமிருந்து எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தோம், அதன் பிறகு அதை நிறுத்த வேண்டியிருந்தது. பின்னர் 2023-24 ஆம் ஆண்டில் வெனிசுலாவிடமிருந்து மீண்டும் எண்ணெய் வாங்கத் தொடங்கினோம், ஆனால் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்ட பிறகு அதை நிறுத்த வேண்டியிருந்தது.” என்றார்.
ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட 16 இந்தியர்கள் குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, “ஈரானில் உள்ள அந்த 16 மாலுமிகளை சந்திக்க எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. பந்தர் அப்பாஸ் நகரில் எங்கள் அதிகாரிகள் அவர்களை சந்தித்தனர். ஈரான் அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, அந்த 16 பேரில் 8 பேர் விடுவிக்கப்பட்டு தாய்நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். மீதமுள்ள 8 பேர் தொடர்பாகவும் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு எவ்வாறு சிறந்த முறையில் உதவ முடியும் என்பதை நாம் பரிசீலித்து வருகிறோம்,” என்று தெரிவித்துள்ளது. ”
