அசாமின் மோரான் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட அவசர தரையிறங்கும் வசதியில் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானம் சனிக்கிழமை காலை தரையிறங்கியது. மாநில உள்கட்டமைப்பு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் இந்த நிகழ்வு முதன்முறையாக நடைபெற்றது. அவசர காலங்களில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் புறப்படவும் தரையிறங்கவும் ஏதுவாக இந்த சிறப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சூழ்நிலையில் ஒரு நாள் பயணமாக சென்ற பிரதமர், இந்த வசதியை திறந்து வைத்தார். தொடர்ந்து இந்திய விமானப்படையின் 40 நிமிட வான்வழி காட்சியையும் பார்வையிட்டார். மேலும் ரூ.5,500 கோடிக்கும் மேற்பட்ட மேம்பாட்டு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சாபுவா விமான நிலையம் வந்த பிரதமரை மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் வரவேற்றனர். அங்கிருந்து இந்திய விமானப்படையின் C-130J விமானத்தில் மோரான் நெடுஞ்சாலை பகுதிக்கு சென்றார். ரூ.100 கோடி செலவில் 4.2 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட இந்த வசதி வடகிழக்கு பிராந்தியத்தில் முதல்முறையாக உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவசர விமான இறங்கும் தளம், வடகிழக்கு இந்தியாவில் முதன்முறையாக உருவாக்கப்பட்டதாகும். இது இந்திய விமானப் படை உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அவசர காலங்களில் இராணுவ மற்றும் குடிமக்கள் விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் ஏற்ற வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்கள் அல்லது மூலோபாய தேவைகள் நேரும் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ள இது மிக முக்கியமான வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
