மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டமான ககன்யான் திட்டப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு ககன்யான் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது அதன் வேகத்தை பாதுகாப்பாகக் குறைக்க உதவும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விண்கலத்தின் ட்ரோக் பாராசூட்களின் தகுதி மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிடும் வகையில் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் வசதியில், டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ககன்யான் விண்வெளி திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மனித விண்வெளிப் பயணத்திற்கு பாராசூட் அமைப்பைத் தகுதி பெறச் செய்வதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை என கருதப்படுகிறது. இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், டிஆர்டிஓ மற்றும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளன.
இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
