கோவாவில் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள அர்புரா பகுதியில் உள்ள கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேளிக்கை விடுதியில் உள்ள சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கோவா கேளிக்கை விடுதி தீ விபத்து செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள X பதிவில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தீ விபத்தில் உறவுகளை இழந்தவர்களுடன் துணை நிற்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார். நிலைமை குறித்து கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உடன் பேசி உள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தேவையான உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
