திருமணமான ஒரு நபர், மற்றொரு பெண்ணுடன் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரை சேர்ந்த அனாமிகா மற்றும் நேத்ரபால் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் தருண் சக்சேனா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. சமூக ஒழுக்கம் மற்றும் தனிநபர் சட்டத்தை விட குடிமக்களின் உரிமைகளே மேலானது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பெண்ணின் தாயார் அளித்த கடத்தல் புகாரை ரத்து செய்த நீதிமன்றம், இருவரும் வயது வந்தவர்கள் என்பதால் அவர்கள் இணைந்து வாழ்வதை தடுக்க முடியாது என கூறியது.
மேலும், கௌரவ கொலை மிரட்டல் விடுத்த பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை தொடர்பு கொள்ள தடை விதித்ததுடன், தம்பதியினருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. “சமூகத்தின் கருத்துகளுக்காகவோ அல்லது அறநெறிக்காகவோ நீதிமன்றம் சட்டத்தின் கடமையிலிருந்து விலக முடியாது” என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
