நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் 100 இடங்கள் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம் பிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், அரசியல் ரீதியான அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தங்களது அயராத உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் நீட் தேர்வினை எதிர்கொண்டவர்களுக்கும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்வானவர்களுக்கும் முதல் நூறு இடங்களைப் பிடித்து சாதித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்! நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்கவும் இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டு முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. திமுக அரசு, இனியாவது தனது பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.