நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டம் தொடங்கியது முதலே பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகியவற்றை விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இரு அவைகளிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது.
அதனை தொடர்ந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இரு அவைகளிலும் தலா 16 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மக்களவையில் உரையாற்றினர். எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தனர். இன்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து மதியம் 12 மணிமுதல் 1 மணிவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றுகிறார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி மக்களவையில் மாலை உரையாற்றுகிறார்.