மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்படுவது மற்றும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மீதான இடைநீக்க நடவடிக்கைகள் சபாநாயகரின் ஒருதலைப்பட்சமான போக்கைக் காட்டுவதாகக் கூறி, சுமார் 118 எம்.பி-க்களின் கையெழுத்துடன் இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவாதத்திற்காக அவையில் மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “கடந்த பல ஆண்டுகளாக மக்களவையில் துணை சபாநாயகர் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. இது அரசமைப்பில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது” என்று அவர் குற்றம் சாட்டினார். பொதுவாகச் சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை வழிநடத்த வேண்டிய துணை சபாநாயகர் இல்லாதது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சமநிலையைச் சீர்குலைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் விவாதிக்கப்படும் போது, சபாநாயகர் ஓம் பிர்லாவால் நியமிக்கப்பட்ட ஒருவரே (ஜெகதாம்பிகா பால்) அவையைத் தலைமை தாங்குவது முறையல்ல என்றும் அவர் வாதிட்டார். தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் போது, நடுநிலையான ஒருவரைத் தலைமை தாங்கச் செய்ய வேண்டும் அல்லது அவையின் ஒட்டுமொத்த ஒப்புதலுடன் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனால் அவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
