காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சார கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர். அதன்படி, இன்று காரைக்காலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் மிகவும் தொன்மையான மொழியை பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டார். இந்தியா கூட்டணியின் தீய நோக்கத்தை கிழித்தெறிய வந்துள்ளதாக கூறிய அவர், ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து சுயமாக செயல்படும் அரசை என்.டி.ஏ. கூட்டணி உருவாக்கி இருக்கிறது என்றார்.
மேலும், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி டெல்லிக்கு அடிமையாக இருந்தது என்ற அமித் ஷா, புதுச்சேரியில் தற்போது இருக்கும் என்.டி.ஏ. கூட்டணி அரசு சுதந்திரமாக இயங்கி வருவதாகவும், டெல்லிக்கு அடிமையாய் இருந்த காலம் போய்விட்டது என்றும் கூறினார். மேலும் புதுச்சேரியில் நாராயணசாமியின் அரசு ஊழல் நிரம்பியதாக இருந்ததாக குறிப்பிட்ட அமித் ஷா, தற்போதைய முதல்வர் ரங்கசாமி சிறப்பான ஆட்சியை நட்த்துகிறார் எனவும் வரும் தேர்தலில் 24 இடங்களை வெல்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும் என்று கூறினார். இதுகுறித்து அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள் என்று குற்றம்சாட்டிய அமித் ஷா, மோடி வந்த பிறகு முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான்வழியாக பதிலடி தரப்பட்டது என்றார்.
