பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஆட்சிக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டதாக டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த ஆட்சி மாற்றம் விரைவில் நிகழும் என குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கெஜ்ரிவால், கடந்த காலங்களில் நிலவிய சூழலை ஒப்பிட்டுப் பேசிய கெஜ்ரிவால், “ஒரு காலகட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் மீம் (Meme) பதிவிட்டவர்கள் கூட உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இப்போது சமூக வலைதளப் பக்கங்கள் எங்குப் பார்த்தாலும் மோடி அரசுக்கு எதிரான விமர்சனங்களாலும், அதிருப்திகளாலும் நிறைந்து வழிகின்றன. இது மக்கள் பயத்திலிருந்து விடுபட்டுள்ளதைக் காட்டுகிறது” என்று கூறினார். மேலும், பாஜகவின் செல்வாக்கு தரைமட்டத்திற்குச் சரிந்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “பாஜகவின் செல்வாக்கு இவ்வளவு சரிந்த பிறகும், அவர்கள் இன்னும் தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் தேர்தல் ஆணையம் தான். முறையான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால் பாஜகவால் வெற்றி பெற முடியாது” என்று சாடினார். கெஜ்ரிவாலின் இந்தச் சீற்றம் மிகுந்த கருத்துக்கள் தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
