ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். உலக பணக்கார கடவுள் என அழைக்கப்படும் ஏழுமலையான் உலக பிரசித்தி பெற்றது. வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஏழுமலையானை கால் கடுக்க நின்று தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்டவற்றின் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, வைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக சொர்க்க வாசல் திறப்பு நடைபெறக் கூடும். சொர்க்க வாசல் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். வைகுண்ட ஏகாதசி நாளில் உத்தார துவாரம் எனும் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஏழுமலையானை தரிசிப்பதால் புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதனால், அந்த நாளில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர். அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான சொர்க்க வாசல் திறப்பு தேதி திருப்பதி தேவஸ்தான் அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு, டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் திறக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, ஜனவரி 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தரிசன டோக்கன் பெறாவிட்டாலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முதல் 3 நாட்கள், டிசம்பர் 30 – ஜனவரி 1ம் தேதி வரையிலான தரிசன டோக்கன்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version