நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் இன்றும் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.
பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் தனது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், குறிப்பாகத் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய ராகுல் காந்தி, “நாடாளுமன்றம் என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சிக்குச் சொந்தமானது அல்ல, அது ஒட்டுமொத்த நாட்டிற்கும் சொந்தமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த அவையில் நாங்கள் எப்போது பேச எழுந்தாலும், எங்களைத் தொடர்ந்து தடுத்து நிறுத்துகிறார்கள்,” என்று தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவணேவின் புத்தகம் தொடர்பான விவகாரங்களை எழுப்ப முயன்ற போதெல்லாம் தனது குரல் ஒடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். “நாங்கள் உண்மைகளைப் பேச முற்படும்போது மைக் அணைக்கப்படுகிறது அல்லது கூச்சலிட்டு எங்களைத் தடுக்கிறார்கள்” என்று அவர் கூறினார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
