கரீபியன் தீவு நாடான ஹைதியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மிலாட் நகரில், உலகப் புகழ்பெற்ற சிட்டடெல் லாபெரியர் (Citadelle Laferrière) மலைக்கோட்டை அமைந்துள்ளது. விடுமுறை தினமான நேற்று, இந்த பாரம்பரியச் சின்னத்தைக் காணவும் அங்கு நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்கவும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் திரண்டிருந்தனர். பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்ட கோட்டை, சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாகத் திகழ்ந்து வருகிறது.
திருவிழா உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அப்பகுதியில் கடுமையான கனமழை பெய்யத் தொடங்கியது. மழையில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பாதுகாப்பான இடங்களை நோக்கி முண்டியடித்துக்கொண்டு ஓடினர். குறுகலான பாதை என்பதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, இறுதியில் அது கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலாக மாறியது.
இந்த கோர விபத்தில் பெண்கள் உட்பட 30 பேர் மூச்சுத்திணறியும் மிதிப்பட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 70-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தத் தீவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
