தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் காக்கா மாகாணத்தில், பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை ஒரு பயணிகள் பேருந்து மீது நடத்தப்பட்ட கொடூரமான வெடிகுண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். காஜிபியோ பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வீசப்பட்ட இந்த வெடிகுண்டு, பேருந்தை உருக்குலைத்ததோடு சாலையில் பெரும் பள்ளத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வரும் நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு அந்தப் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுக்களே காரணம் என கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். இதனை ஒரு “பயங்கரவாதத் தாக்குதல்” என வன்மையாகக் கண்டித்துள்ள அவர், குற்றவாளிகளைத் தேடிப் பிடிக்க ராணுவத்திற்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அடுத்த மாதம் கொலம்பியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version