அமெரிக்க நீதித்துறையால் ஜன.30ம் தேதி வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்த சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் இடம் பெற்றிருந்தன. அதில், பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் மூலம் அவருக்கு பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், எப்ஸ்டீன் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார் என்ற தகவல்கள் இணையதளங்களில் வைரலாக பரவின.
மேலும், பால்வினை நோய்க்காக(STD) சிகிச்சை அளிக்க மருந்துகளை பெற எப்ஸ்டீன் உதவியதாகவும், அந்த மருந்துகளை தனது மனைவி மெலிண்டாவிற்கு தெரியாமல் அவருக்கு வழங்குவதற்கும் பில் கேட்ஸ் முயன்றதாகவும் எப்ஸ்டீன் அந்த மின்னஞ்சலில் எழுதியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் அபத்தமானவை என்றும், முற்றிலும் பொய்யானவை என்றும் மேலும், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு பில் கேட்ஸுடன் இருந்த தொடர்பை அவர் துண்டித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், எப்ஸ்டீன் இத்தகைய அவதூறுகளை பரப்ப முயன்றதாகவும் விளக்கமளித்திருந்தார்.
இதையடுத்து, “எப்ஸ்டீன் கோப்புகள் எனது திருமண வாழ்க்கையின் மிகவும் வேதனையான காலங்களை நினைவுக்கு கொண்டு வந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு கடினமாக இருக்கிறது. அதிலுள்ள கேள்விகளுக்கு என் முன்னாள் கணவர்தான் பதிலளிக்க வேண்டும், என்று பில்கேட்சின் முன்னாள் மனைவி மெலிண்டா தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், எப்ஸ்டீனுடன் செலவழித்த ஒவ்வொரு கணத்திற்காகவும் வருந்துகிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பில்கேட்ஸ் மனம் திறந்துள்ளார். மேலும் சிறுமிகள் குறித்து கசிந்த மின்னஞ்சல்களில் உள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
