இன்று உலகையே உலுக்கி வரும் எப்ஸ்ட்டீன் ஃபைல்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்த குற்ற சம்பவங்கள் அரங்கேறிய அந்த ஒற்றைத்தீவு பற்றி தெரியுமா? பாவத்தீவு என அழைக்கப்படும் அந்த தீவு பற்றிய பல திடுக்கிட்டு தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முதலில் இந்த ஒட்டுமொத்த சர்ச்சைகளுக்கெல்லாம் மையப்புள்ளியான ஜெஃப்ரி எப்ஸ்ட்டீன் என்பவர் யாரென்று பார்த்தால் தான் தீவை பற்றி பார்ப்பதற்கான காரணம் புரியும். அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்ட்டீன், நியூயார்க் நகரில் உள்ள உலக நிதி சந்தையான வால்ஸ்ட்ரிட்டில் பணியாற்றியவர். தனது தொழில் மற்றும் நிதி திறமையால் நாட்டின் பெரிய நிறுவனங்களின் தலைவர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதன் மூலம் அவரது வருமானம் உச்சத்திற்கு எகிற, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு நிதி உதவிகளை வழங்கி கவனம் ஈர்த்தார்.
இவையெல்லாம் ஜெஃப்ரி எப்ஸ்ட்டீனின் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் கொடூரமானது. இவரது வணிக ஒப்பந்தங்கள், சக்தி வாய்ந்த நபர்களின் நட்புகள் ஆகியவற்றின் ஒரு முக்கிய பகுதியாக பாலியல் தொழில் இருந்துள்ளது. அதுவும் சிறுமிகளை வைத்து மேற்கொண்ட பாலியல் தொழில். இது தொடர்பான ஆவணங்களும், இ-மெயில் உரையாடல்களும், வீடியோக்களும், “பெரு பணம் படைத்த முதலைகளின் காம இச்சைகள் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு சிறுமிகள் இரையாக்கப்பட்டுள்ளனர்” என்ற விடயத்தை வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளது. இக்கொடூர குற்றச்சாட்டின் பேரில் கைதாகி சிறையில் இருந்த இந்த ஜெஃப்ரி எப்ஸ்ட்டீன் 2019 ஆம் ஆண்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அது தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும் சிறையில் கண்காணிப்பு கேமரா இல்லாமல் போனது, அவரது உடலில் இருந்த மர்ம காயங்கள், பணியில் இருந்த போலீசார் தூங்கியதாக சொல்லப்பட்டது எல்லாம் சந்தேகங்களை ஏற்படுத்தியது. தற்போது வரை அந்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் அவர் இறந்து 6 ஆண்டுகள் கழித்து, அவரது தோழியான கிஸ்லென் மேக்ஸ்வெல் என்பவரது வழக்கின் ஒரு பகுதியாக 900-க்கும் மேலான ஆவணங்கள் அமெரிக்க நீதித்துறையால் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்களே இன்று உலகையே திக்குமுக்காட வைத்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்ட்டீனுடன் நட்புறவில் இருந்த அரசியல் தலைவர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், விஞ்ஞானிகள் என ஏராளமான பெரும்புள்ளிகளின் நற்பெயர் மற்றும் நம்பகத்தன்மை இதன்மூலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், ஆவணங்களில் இடம்பெற்றிருப்பதாலேயே அவர்களை குற்றவாளிகளாக கருதவும் முடியாது.
சரி இப்போது அந்த தீவை பற்றி பார்க்கலாம். இந்த ஜெஃப்ரி எப்ஸ்ட்டீன் அமெரிக்க கரீபியன் கடல் பகுதியில் யு.எஸ்.விர்ஜீன் தீவுகளில் ஒன்றான லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவை (72 ஏக்கர்) 1998 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். அங்கு தன்னுடைய தனி விமானம் மூலம், பல்வேறு முக்கியப்புள்ளிகளை அங்கு அழைத்து வந்துள்ளார். உள்ளூர் மக்களால் “பாவங்களின் தீவு” மற்றும் “குழந்தை பாலியல் தீவு” என அழைக்கப்படும் அந்த மர்மத்தீவு வெளியுலக தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. யாரும் உள்ளே செல்ல முடியாத அந்தத்தீவில் விசித்திரமான கட்டுமானங்கள், நீலநிற கோடுகளுடன் கூடிய பூட்டப்பட்ட கட்டிடம், அதிநவீன ஹெலிபேட், நூலகம், சொகுசு விடுதிகள், பாதாள சுரங்க அறைகள் போன்றவை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீவுக்கு வந்து சென்ற உலக நாடுகளின் தலைவர்கள், பணக்காரர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்களின் விவரங்கள் விமான போக்குவரத்து பதிவுகளாக உள்ளன. இந்த மர்மத்தீவு தான் எப்ஸ்ட்டீனின் பாலியல் கடத்தல் அமைப்பின் தலைமையகமாக செயல்பட்டுள்ளது.
தீவின் ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அங்கு வந்த பெரும்புள்ளிகளின் செயல்பாடுகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், அப்பெரும்புள்ளிகள் மிரட்டப்பட்டிருக்கலாம், தற்போதும் உலக வல்லாதிக்கத்தால் மிரட்டப்பட்டு வரலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரதமர் மோடியின் பெயரும் அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, தற்போது இந்திய – அமெரிக்க ஒப்பந்தங்களுக்கு இந்தியா உடன்பட்டிருப்பதன் பின்னணியிலும் இவ்விவகாரம் இருக்குமோ? என சந்தேகிக்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ். எப்ஸ்டீன் மறைவுக்கு பிறகு, 2023-ல் ஸ்டீபன் டெக்காப் என்ற முதலீட்டாளர், அந்த தீவையும் அதன் அருகில் இருக்கும் கிரேட் புனித ஜேம்ஸ் தீவையும் சுமார் 60 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.560 கோடிக்கு) வாங்கியுள்ளார்.
மொத்தத்தில் உலகையே உலுக்கியிருக்கும் சிறுமிகளின் பாலியல் கொடூர சம்பவங்கள் நடந்துள்ள, ‘பாவங்களின் தீவு’ எனப்படும் ‘லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவை’ உலக மக்கள் பலரும் கூகுள் மேப்பில் தேடி வருகின்றனர்.
