சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.
2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான போட்டி அட்டவணை வெளியீட்டு நிகழ்ச்சி வாஷிங்டனில் நடைபெற்றது. இதில், அதிபர் டிரம்ப் பங்கேற்றார். அப்போது, சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதிக்கான பரிசு டிரம்புக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியானி இன்பான்டினோ அதிபர் டிரம்புக்கு வழங்கினார். அப்போது டிரம்புக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அதிபர் டிரம்புக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக ஃபிபா தலைவர் இன்பான்டினோ தெரிவித்துள்ளார். இந்த விருது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதைகளில் ஒன்றாகும் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை கொண்டு வரும் தனி நபர்களை அங்கீகரிப்பதற்காக மக்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட விருது இது என ஃபிபா தெரிவித்துள்ளது.
