ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் முழு ஈரானுக்கும் எதிரான ஒரு வெளிப்படையான போராகக் கருதப்படும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட ஒரு காரசாரமான வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பெசெஷ்கியான் கூறியதாவது, “எங்கள் மாபெரும் தலைவர் மீதான தாக்குதல், ஈரானுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போரைப் போன்றது” என்று எழுதியுள்ளார். ஈரானுக்கு ஒரு புதிய தலைமை தேவை என்று டிரம்ப் ஒரு நேர்காணலில் கூறியதிலிருந்து பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவைக் குற்றம் சாட்டிய அவர், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் விதித்துவரும் நீண்டகால பகைமை மற்றும் மனிதாபிமானமற்ற தடைகளால் ஈரானிய மக்கள் கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதற்கு முன், ஈரானின் உச்ச தலைவர் கமேனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஈரானில் சமீப காலத்தில் ஏற்பட்ட கலவரங்களின்போது ஏற்பட்ட மரணங்களுக்கும் சேதங்களுக்கும் ட்ரம்ப் பொறுப்பேற்கவேண்டும் எனக் கூறி, அவரை “குற்றவாளி” என்று அழைத்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் தலைமையை கடுமையாக விமர்சித்தார். அதில், பல தசாப்தங்களாக தொடரும் ஈரான் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும், நாட்டிற்கு புதிய தலைமையகம் தேவை என அவர் கூறினார். சமீப வாரங்களில் ஈரானில் நடந்துவரும் போராட்டங்கள், அரசியல் அழுத்தம், பொருளாதார நெருக்கடி, மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக மக்களிடையே உருவான கோபத்தின் வெளிப்பாடே என ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரானியத் தலைவர்கள் பயம் மற்றும் வன்முறை மூலம் ஆட்சி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். தற்போதைய தலைமை ஆட்சியில் நீடிப்பதற்காக அடக்குமுறையைக் கையாள்வதாகவும், அது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் முதல் தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதட்டமாகவே இருந்து வருகின்றன. இந்தக் காலகட்டத்தில், அமெரிக்கா தனது கடுமையான அழுத்தக் கொள்கையைத் தொடர்ந்தது, மேலும் இரு நாடுகளின் தலைவர்களும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
