அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஈரான் மீதான போர் நடவடிக்கை மற்றும் அதிகரித்து வரும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட போராட்டங்கள் வெடித்துள்ளன. டிரம்ப்பின் ‘சர்வாதிகாரப் போக்கு’ மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை விமர்சித்து ‘No Kings’ என்ற அமைப்பு இந்த நாடு தழுவிய போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது. குறிப்பாக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி. மற்றும் மின்னசோட்டா உள்ளிட்ட 3,300-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 80 லட்சம் மக்கள் திரண்டு, டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஈரான் மீதான போர் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் டிரம்ப்பின் கடுமையான அணுகுமுறை ஆகியவையே இந்தப் போராட்டத்தின் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. “அமெரிக்காவுக்கு அரசர்கள் தேவையில்லை, ஜனநாயகம் மட்டுமே வேண்டும்” என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தி போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ, பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த மக்கள் எழுச்சியில் பங்கேற்று, டிரம்ப்பின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
