டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வரலாறு படைத்துள்ளார். விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அவரது செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஊடக நிறுவனமான xAI-ஐ கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, மஸ்கின் செல்வம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அவரது நிகர மதிப்பு தற்போது 800 பில்லியன் டாலர்களை (ரூ. 72,37,400 கோடி) தாண்டி, அவரை உலகின் மிகப் பெரிய பணக்காரராக ஆக்கியுள்ளது.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு அவற்றின் ஒருங்கிணைந்த மதிப்பை 1.25 டிரில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. மஸ்கின் செல்வமும் சுமார் 84 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
இணைப்பு நடைபெறுவதற்கு முன், எலான் மஸ்க் SpaceX நிறுவனத்தில் சுமார் 42% பங்குகளை வைத்திருந்தார். கடந்த டிசம்பரில் நடைபெற்ற டெண்டர் ஆஃபருக்குப் பிறகு SpaceX நிறுவனத்தின் மதிப்பு 800 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மஸ்க் வைத்திருந்த பங்குகளின் மதிப்பு சுமார் 336 பில்லியன் டாலராக இருந்தது.
அதேபோல், இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற தனியார் நிதி திரட்டலுக்குப் பிறகு 250 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட xAI நிறுவனத்தில் மஸ்க் சுமார் 49% பங்குகளை கொண்டிருந்தார். இதன் மூலம் xAI-யில் அவர் வைத்திருந்த பங்குகளின் மதிப்பு சுமார் 122 பில்லியன் டாலராக உயர்ந்தது.
இணைப்பிற்குப் பிறகு, SpaceX $1 டிரில்லியன் மற்றும் xAI $250 பில்லியனாக மதிப்பிடப்பட்டது. ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி, மஸ்க் இப்போது புதிய நிறுவனத்தில் 43% பங்குகளை வைத்திருக்கிறார், இது தோராயமாக $542 பில்லியன் மதிப்புடையது.
விண்வெளிப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்ஏஐ ஆகியவை விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு கணினித் திறனை விரிவுபடுத்துவதற்காக இணைந்தன. இதில், தரவு மையங்களாகச் செயல்படும் ஏராளமான செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவது அடங்கும். ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் மஸ்க்கின் இரண்டு நிறுவனங்கள் இணைவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம், மஸ்க் தனது செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான xAI-ஐ X உடன் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
