என்னுடைய தந்தை டாக்டர் ராமதாஸ் அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணிக்கு வேண்டாம் என சொல்லப் போகிறேன் என ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் மத்தியில் அன்புமணி பேசியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசின் கருத்துக்களை மறுக்கும் வகையில் அன்புமணி பேசியுள்ளார். அதாவது தன்னுடைய தந்தை ராமதாஸ் சொல்லி தான் பாஜகவுடன் 2024ல் கூட்டணி பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் சரி என்று கூறியதால் தான் பாஜகவினர் தைலாபுரம் வீட்டிற்கு வந்தனர் என்றும் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது என்றும் தற்போது இல்லை என ராமதாஸ் மறுக்கிறார் என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார். அவர் வயது முதிர்வு காரணமாக ஒருகுழந்தை போல மாறிவிட்டார் அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதேபோன்று அதிமுகவின் சிவி சண்முகம் தைலாபுரம் தோட்டம் வந்து சென்றபோது அவர் எதற்காக வந்தார் என கேட்டதாகவும் அதற்கு அவர் பத்திரிகை வைப்பதற்காக வந்து சென்றார் என தன்னிடம் கூறியதாகவும் அன்புமணி கூறியுள்ளார்.
மேலும் திமுக தான் பாமகவிற்கு எதிரி என்றுத்ம திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தினார். விசிகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். வன்னியரசுவும், ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் ராமதாஸ் மீது திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது என அன்புமணி வினவினார். என்றைக்காவது ஒருநாள் திருமாவளவன், ராமதாஸ் அவர்களை புகழ்ந்து பேசி உள்ளாரா ? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார் என்பதும் அவரின் கேள்வியாக உள்ளது.
அதேபோன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கு தற்போதைய திடீர் பாசம் ஏன் ஏற்பட்டது. இவர்கள் எல்லாம் ஏன் திடீரென ராமதாசை சந்திக்கிறார்கள் எனவும், இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி. இது குறித்து எல்லாம் யோசிக்க வேண்டும் என்பதும் அன்புமணியின் கேள்வியாக உள்ளது.