கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற தவெக கட்சியின் மக்கள் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் இருந்து மத்திய அரசு அனுப்பி வைத்த அமைச்சர்கள், எம்பிகள் அடங்கிய குழு, விசாரணை மேற்கொண்டனர். இதேநேரம் தமிழக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணையும் தீவிரமடைந்து வருகிறது.
இந்த சூழலில் கோவையில் இருந்து டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் ஐந்து மாநில பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ள நிலையில் அதில் அண்ணாமலையும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், ஓபிஎஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
மேலும் கரூரில் நடைபெற்ற தவெகவின் பிரச்சார அசம்பாவிதம் குறித்து டெல்லியிலேயே அமித்ஷா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் உள்ளிட்டோரை சந்தித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.