கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அதை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27 ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
புஸ்ஸி ஆனந்த் தரப்பில் இரண்டாவது முறையாக முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே கரூர் வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமின் மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கரூர் நகர காவல் ஆய்வாளரை எதிர்மனுதாரராக குறிப்பிட்டு தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு, முன் ஜாமின் மனு வாபஸ் பெற்றதால் அதை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
