சேகர்பாபுவை சந்தித்த பிறகுதான் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தார். ஆகவே, சேகர்பாபுவின் ஆலோசனைப்படிதான் அவர் தவெக-வில் இணைந்திருக்கிறார்” என்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் நடைபெறும் 4-வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் அருகில் இருந்து 15 வாகனங்களில் யாத்ரீகர்கள் புறப்பட்டுச் சென்றனர். இந்த பயணத்தை நயினார் நாகேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்த இறந்துபோன 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதுபோல், தமிழகத்தில் மறைந்த சுமார் 75 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 2002-க்கு பின்னர் யாரெல்லாம் இறந்து போனார்களோ அவர்களது பெயர்கள் எல்லாம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளன.
முதல்வரின் கொளத்தூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் மட்டும், இறந்துபோன 10 ஆயிரம் பேரின் பெயர்கள் உள்ளன. அவற்றை நீக்கிவிடக்கூடாது என்பதுதான் திமுக-வின் நோக்கம். முதல்வர் அதற்காகத்தான் நீதிமன்றத்துக்கு சென்றார். இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும், 18 வயது நிரம்பியவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் எஸ்ஐஆர் கொண்டுவரப்பட்டது. இதில் குளறுபடி எதுவும் இல்லை. முதல்வர்தான் குளறுபடி செய்கிறார்.
செங்கோட்டையனை தவெகவுக்கு பாஜகதான் அனுப்பியதாக கூறுவது உண்மையாக இருந்தால் அவர் ஏன் சேகர்பாபுவை சந்திக்க வேண்டும்? சேகர்பாபுவை சந்தித்த பிறகுதான் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தார். ஆகவே, சேகர்பாபுவின் ஆலோசனைப்படி தான் அவர் தவெக-வில் இணைந்திருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் போக்குவரத்துத் துறை அமைச்சராக, கல்வி அமைச்சராக இருந்தபோது நல்லாட்சி இல்லையா? தவெக-வில் சேர்ந்த பின்னர், நல்லாட்சி தருவோம் என்று அவர் சொல்வதை மக்கள் எப்படி பார்ப்பார்கள்? எந்த தனிப்பட்ட நபரையும் நம்பி எந்தக் கட்சியும் இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் கூட நிறைய மாற்றங்கள் வரலாம். தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
