தவெக தலைவர் விஜய் கூட்டணி அமைக்காவிட்டால் பரிதாபமான தோல்வியை சந்திப்பார் என்று தமிழருவி மணியன் கூறினார்.
அவரது காமராஜர் மக்கள் கட்சியை, தமாகாவுடன் இணைக்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழருவி மணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணியை நான் உருவாக்கவில்லை. அதில் காந்திய மக்கள் இயக்கம் இடம் பெறவில்லை. விஜயகாந்தை முதல்வராக முயற்சித்தேன் என்பதும் தவறான தகவல். மாற்று அரசியலை உருவாக்குவோம் என்று ரஜினி சொன்னதால்தான் அவருடன் இணைந்து செயல்பட்டேன்.
விஜய்க்கு கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் வேண்டுமானாலும் இருக்கலாம். வரக்கூடியது சட்டப்பேரவைத் தேர்தல். அந்த தேர்தலில் அரசியல் எதிரியை வீழ்த்த விஜய் முயற்சிக்க வேண்டும். அவரது அரசியல் எதிரியான திமுகவை வீழ்த்த, வலிமையான கூட்டணியில் விஜய் இடம்பெற வேண்டும்.
ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோது மாநிலமே குலுங்கியது. ஆனால், பின்னர் பரிதாபமான சூழ்நிலையைத் தான் சிரஞ்சீவி சந்தித்தார்.
விஜய் கூட்டத்தைக் கலைக்க காவல் துறை முனைகிறது. தேர்தல் நேரத்தில் திமுக பல சித்துவிளையாட்டுகளை அரங்கேற்றும். அதை சமாளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
