தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமாகா தலைவர் ஜி.கே வாசன் எம்.பி.தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமாகா மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, துணைத் தலைவர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
தொடர்ந்து காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அந்த கட்சியைச்சேர்ந்தவர்கள் ஜி.கே.வாசன் முன்னிலையில் தமாகாவில் இணைத்து கொண்டனர். அப்போது தமிழருவி மணியன் உள்ளிட்டோருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்று உருவாக்க தமிழருவி மணியன் தன்னை அர்ப்பணித்து கொள்ள வேண்டும். இந்த இணைப்பு விழாதான் எங்கள் இருவரையும் இணைத்து இருக்கிறது என்பது தவறு. பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு மூப்பனார் தலைமை ஏற்று செயல்பட்டார். மூப்பனார் மறைவுக்கு பிறகு என்னுடைய வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
அகில இந்திய அளவில் என்னுடைய வளர்ச்சி உயர்வில் அக்கறையுடன் தமிழருவி மணியன் செயல்பட்டார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உயர வேண்டும், வளர வேண்டும் என்று உதவியாக இருந்தவர் தமிழருவி மணியன். நான் எடுக்கும் முடிவுகள் தொடர்பாக தமிழருவி மணியனுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்து இருக்கிறேன். எனக்கு பல நேரங்களில் பல முடிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 ஆண்டுகளாக மலர் படுக்கையில் பயணிக்கவில்லை என்று தமிழருவிமணியனுக்கு தெரியும். முள்படுக்கையில் படுக்க வேண்டும் அதிலிருந்து மீட்க வேண்டும் என பிறந்த நாள் பரிசாக அவர் கட்சி இணைப்பை நடத்தி இருக்கிறார். வெற்றி தோல்வி தாண்டியும் மரியாதையுடன் பயணிக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டு குடும்பம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்த மூத்த தலைவர் தமிழருவிமணியன், துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றியும். இவ்வாறு அவர் பேசினார்.
