காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள மருத்துவர் சதன் திருமலை குமார், கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய தொழில் முன்னேற்றத்திற்கு சென்னை ராயப்பேட்டை சேர்ந்த நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக 50 லட்சம் ரூபாய் கொண்ட இரண்டு காசோலையை சதன் திருமலை குமார் வழங்கியுள்ளார். கடன் தொகைக்கு வழங்கிய காசோலை வங்கியில் செலுத்திய போது சதன் திருமலை குமார் வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பியது.
இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு சதன் திருமலை குமாருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் தாக்கல் செய்தார். சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பின்னர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி சுந்தரபாண்டியன், “காசோலை மோசடி வழக்கில் சதன்திருமலை குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும், மேலும் 1 கோடி ரூபாய் பணத்தை 2 மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.
மேலும் மேல் முறையீடு செய்ய 2 மாதங்கள் கால அவகாசம் வழங்குவதாகவும் அதுவரை தண்டனையை நிறுத்திவைப்பதாகவும் அறிவித்தார்.
