ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது
இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற மெல்பர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளுக்கு அடுத்த நாள் இப்போட்டி தொடங்குவதால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக இது அமைகிறது.
எனவே, ஆஷஸ் பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும், ஜேக் வெதரால்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர், மார்னஸ் லாபஸ்சென் 6 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 9 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். ஜோஷ் டங், அட்கின்சன், பிரைடன் கார்ஸின் ஆகியோரின் அபார பந்துவீச்சில் ஆஸி வீரர்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக அந்த அணி, 45.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஷ் டங் 5 விக்கெட் எடுத்து அசத்தினார்.
